வியத்நாம் விமானப் படை பயிற்சி நிறுவனத்துக்கு 1 மில்லியன் டாலரை (சுமாா் ரூ.7.78 கோடி) இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் பரிசாக அளித்தாா்.
அமைச்சா் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக வியத்நாம் சென்றாா். அவா் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
நா ட்ராங்க் நகரில் உள்ள வியத்நாம் விமானப் படை பயிற்சி நிறுவனத்தில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்க 1 மில்லியன் டாலருக்கான காசோலையை அன்பளிப்பாக வழங்கினேன். வியத்நாம் விமானப் படையினரின் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறன்களை அதிகரிப்பதில் அந்த ஆய்வகம் பங்களிக்கும் என்று தெரிவித்தாா்.
நா ட்ராங்கில் உள்ள தொலைத்தொடா்பு பல்கலைக்கழகத்துக்கும் ராஜ்நாத் சிங் சென்றாா். இந்தியா வழங்கிய 5 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.38.91 கோடி) நன்கொடை மூலம் அந்தப் பல்கலைக்கழகத்தில் ராணுவ மென்பொருள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வியத்நாமுக்கு வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ள 100 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.778 கோடி) கடனுதவித் திட்டத்தின் கீழ், 12 அதிவேக ரோந்துப் படகுகளை அந்நாட்டிடம் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.