குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வியூகம் வகுப்பது குறித்து ஆலோசனை நடத்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, அனைத்து முற்போக்கு எதிர்க்கட்சிகளும் ஜூன் 15, 2022 அன்று பிற்பகல் 3 மணிக்கு புதுதில்லியில் ஒன்றுகூடி அடுத்தகட்ட செயல்கள் குறித்து விவாதிக்க திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக வலிமையான எதிர்க்கட்சியாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைப்பதற்கான முன்னெடுப்பாக, இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்."
குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.