ஜார்க்கண்டில் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டம், வன்முறையில் முடிந்து 2 பேர் உயிரிழந்ததையடுத்து, தலைநகர் ராஞ்சியின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வன்முறை காரணமாக இணையதள சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ரத்தானது நாளை (ஜூன் 12) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:
"ராஞ்சியில் 12 காவல் நிலையங்களுக்குள்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகள் மற்றும் விடியோக்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அடையாளம் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன."
ராஞ்சியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வன்முறையில் இரண்டு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
நபிகள் நாயகம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த நவீன் ஜிண்டால், நூபுர் சர்மா ஆகிய இருவரும் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து, பாஜகவிலிருந்து ஜிண்டால் நீக்கப்பட்டார். நூபுர் சர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார். இவர்களது கருத்துகளுக்காக, மத்திய அரசுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளிக்கிழமை போராட்டம் வெடித்தது.