நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் 6 மணி நேரத்திற்கும் மேலாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அமலாக்கத் துறையினர், இன்று காலை முதல் மதிய உணவு இடைவேளை வரை 3 மணி நேரம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து பிற்பகல் முதல் மீண்டும் ராகுல் காந்தியிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கு குறித்து விசாரிக்கக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை ஜூன் 13-ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இதையடுத்து இன்று காலை அமலாக்கத்துறை முன்பு ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். சுமார் மூன்று மணி நேர விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து அவர் வெளியே வந்தார். விசாரணை நிறைவு பெற்றதாக அப்போது கருதப்பட்டது.
எனினும் உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.