லக்னௌ: நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மத ரீதியான சர்ச்சைக் கருத்துகளும், அதற்கெதிரான போராட்டங்களும் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த செய்தி உங்கள் முகத்தில் லேசான புன்னகையை நிச்சயம் வரவழைக்கும்.
யமீன் சித்திக் என்ற 23 வயது முஸ்லிம் இளைஞர், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உருவத்தை, தனது நெஞ்சில் பச்சைக்குத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், யோகி ஆதித்யநாத் தனது வழிகாட்டி என்றும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, எனது நெஞ்சில் பச்சைக்குத்திக் கொண்டதாகவும், அதுவே அவருக்கு தான் அளிக்கும் பிறந்தநாள் பரிசு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் சொந்தமாக காலணித் தொழில் செய்து வரும் சித்திக், நெஞ்சில் யோகி ஆதித்யநாத்தின் பச்சைக் குத்திக் கொண்டது குறித்து நண்பர்களும் உறவினர்களும் பல்வேறு கருத்துகளைக் கூறினாலும், அது குறித்து தான் கவலைப்படவில்லை என்கிறார்.
எனக்கு ஒரே ஒரு ஆசைதான், நான் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்திக்க வேண்டும். அப்போது இந்த பச்சைக்குத்தியிருப்பதை அவருக்குக் காண்பிக்க வேண்டும் என்கிறார்.