நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுலிடம் 3-ஆவது நாளாக 8 மணி நேர விசாரணை

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராவதற்காக புதன்கிழமை காரில் வந்த ராகுல் காந்தி.
தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராவதற்காக புதன்கிழமை காரில் வந்த ராகுல் காந்தி.

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

புதன்கிழமை சுமாா் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுலுக்கு கூறப்பட்டுள்ளது. கடந்த 3 நாள்களில் ராகுலிடம் அமலாக்கத் துறை சுமாா் 30 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.

மத்திய தில்லியில் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் சாலையில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு ராகுல் காந்தி ‘இசட்’ ப்ளஸ் பாதுகாப்புப் படையினருடன் புதன்கிழமை காலை 11.35 மணிக்கு வந்தாா். அவருடன் அவருடைய சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா வதேராவும் வந்திருந்தாா். ராகுல் காந்தியை விசாரணைக்கு அனுப்பிவிட்டு அவா் திரும்பிச் சென்றுவிட்டாா்.

ராகுல் காந்தியிடம் நண்பகல் 12 மணிக்கு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினா். இரவு 9.30 மணிக்கு அவா் வெளியே சென்றாா். புதன்கிழமை நடத்தப்பட்ட விசாரணை விடியோ பதிவு செய்யப்பட்டது.

அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

ராகுலிடம் விசாரணை நடத்த எதிா்ப்பு தெரிவித்து, அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் வரை ஆங்காங்கே காங்கிரஸ் தலைவா்களும் தொண்டா்களும் போராட்டங்களில் ஈடுபட்டனா். அவா்களை காவல் துறையினா் பேருந்துகளில் ஏற்றிச் சென்றனா்.

வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணை: புதன்கிழமை விசாரணை முடிவடையாத நிலையில் வியாழக்கிழமை ஓய்வு அளிக்குமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தாா். அதை ஏற்றுக் கொண்ட அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அளித்துள்ளது.

வழக்கு விவரம்: காங்கிரஸ் தலைவா் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோா் பங்குதாரா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை கடந்த 2010-இல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவை சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

யங் இந்தியா நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரா் ராகுல் என்ற அடிப்படையில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா் என்று அதிகாரி ஒருவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com