இதுதான் இந்தியா: நிற்கவிருந்த முஸ்லிம் விதவையின் மகள் திருமணத்தை நடத்திய இந்துக்கள்

நாட்டின் பல இடங்களில் வன்முறை வெடித்திருக்கும் நிலையில், வன்முறையால் நின்றுபோகவிருந்த முஸ்லிம் விதவையின் மகள் திருமணத்தை இந்துக்கள் முன்னிருந்து நடத்திக் கொடுத்துள்ளனர்.
இதுதான் இந்தியா: முஸ்லிம் விதவையின் மகள் திருமணம்: கைகொடுத்த இந்துக்கள்
இதுதான் இந்தியா: முஸ்லிம் விதவையின் மகள் திருமணம்: கைகொடுத்த இந்துக்கள்

கொல்கத்தா: பாஜக தலைவர்களின் சர்ச்சைப் பேச்சால், நாட்டின் பல இடங்களில் வன்முறை வெடித்திருக்கும் நிலையில், வன்முறையால் நின்றுபோகவிருந்த முஸ்லிம் விதவையின் மகள் திருமணத்தை இந்துக்கள் முன்னிருந்து நடத்திக் கொடுத்துள்ளனர்.

கொல்கத்தாவின் ஹௌராவை அடுத்த உலுபெரியாவில் கடும் வன்முறைப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் கடந்த ஞாயிறன்று நடைபெறவிருந்த தனது மகளின் திருமணத்தை தள்ளிப்போட நினைத்தார் இத்தெனெசா முல்லிக். கணவரை இழந்து மூன்று மகள்கள், ஒருமகனுடன் தேசிய நெடுஞ்சாலை - 6-க்கு அருகே சிறிய குடிசையில் வாழும் இவர், அப்பகுதியில் நடந்த பயங்கர வன்முறைப் போராட்டங்களால், மகள் பகிஸாவின் திருமணத்தை தள்ளிப்போட முடிவெடுத்தார்.

ஆனால் எனது முடிவைக் கேட்ட அக்கம் பக்கத்தில் வாழும் இந்துக் குடும்பங்கள், தாமாகவே முன் வந்து, நாங்கள் இருக்கிறோம், திருமணத்தை சிறப்பாக நடத்திக் கொடுக்கிறோம் என்று கூறி எனக்கு உடன் நின்றனர்.

அவர்களே, மணமகன் வரவேற்பு முதல், மணமக்கள் மணமகனின் வீட்டுக்குச் சென்று சேரும் வரை அனைத்தையும் முன்னின்று நடத்திக் கொடுத்துள்ளனர். இது பற்றி இந்துக்கள் கூறுகையில், நாங்கள் அனைவரும் பல காலமாக ஒரே கிராமத்தில் வசிக்கிறோம். எப்போதுமே ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்போம். பகிஸாவின் திருமணம் குறித்து அவரது தாய் கலங்கும் போது அவருக்கு ஒன்று சேர்ந்து உதவுவது என்று முடிவெடுத்தோம். திருமணத்தை சிறப்பாக நடத்தினோம் என்கிறார் ஒருவர்.

தங்கள் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், திருமணத்தை நடத்திக் கொள்ள ஒருவர் காவல்நிலையம் சென்று அனுமதி கேட்டுள்ளார். ஒருவர் வாடகைக்கு கார் பிடித்து, மணமக்களை மணமகன் வீட்டுக்கு அனுப்பும் பொறுப்பை எடுத்துக் கொண்டுள்ளார். மற்றவர்கள் திருமணத்துக்கு வந்தவர்களின் பாதுகாப்பை பார்த்துக் கொண்டுள்ளனர். 

இது குறித்து மணமகன் கூறும்போது, அச்சத்துடன் இங்கு வந்த  எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. என்னை வரவேற்றவர்கள் அனைவரும் இந்துக்கள். அவர்களால் தான் ஒட்டுமொத்த திருமணமும் சிறப்பாக நடந்து, நாங்களும் பாதுகாப்பாக ஊர் திரும்பினோம். இது என் வாழ்வில் பொன்னாள் என்கிறார் மகிழ்ச்சியோடு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com