அக்னிபத் திட்டத்தினை எதிர்த்து மேற்கு வங்காளத்தின் வடக்கு பர்கானா மாவட்டங்களில் இன்று (ஜூன் 17) காலை மாணவர்கள் பலர் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிட்டத்தட்ட 50-லிருந்து 60 மாணவர்கள் சியால்டா-பான்கயோன் வழித்தடத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கிழக்கு மண்டல ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, “ தாக்கூர் நகர் ரயில்நிலையத்தில் மாணவர்கள் காலை 7.50 முதல் 9.15 வரை தண்டவாளங்களில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ரயில்வே சேவைகள் பாதிக்கப்பட்டன. பின்னர் ரயில் சேவைகள் வழக்கம் போல் தொடங்கின.” என்றனர்.
போராட்டக்காரர்கள் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக ரயில் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்வே சேவை பாதித்தது என கியாகட்டா காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனு தாக்கூரின் இல்லத்தை நோக்கி செல்லவும் முயற்சி செய்தனர்.
மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) அன்று ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் என்ற புதிய திட்டத்தினை அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒப்பந்த அடிப்படையில் குறுகிய 4 ஆண்டு காலத்திற்கு மட்டும் இளைஞர்களை ராணுவத்தில் பணியில் அமர்த்தும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல மாநிலங்களிலும் போராட்டம் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.