காங்கிரஸ் கட்சியில் இருந்து ராணுவத்தில் சேர விருப்பம் உடையவர்கள் அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றின் காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர் இதனை தெரிவித்தார். இந்த சட்டத்தினை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை அரசிற்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என சோனியா காந்தி தெரிவித்தார். மேலும், இந்தத் திட்டம் எந்த ஒரு திசையும் இல்லாமல் அர்த்தமற்றதாக உள்ளது எனவும், ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களின் நலனை அரசுக் கருத்தில் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த புதிய அக்னிபத் திட்டத்தினை எதிர்த்து நாடு முழுவதும் 8 மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன, இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 325 பேர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். நாட்டின் பல மாநிலங்களிலும் அக்னிபத் திட்டத்தினை எதிர்த்து ரயில்நிலையங்களை போராட்டக்காரர்கள் சூறையாடி வருகின்றனர், பல இடங்களில் ரயில் பெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டது.
முன்னதாக ராகுல் காந்தி இந்தத் திட்டம் குறித்து பேசுகையில், இளைஞர்களின் கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொள்ள வேண்டும். விவசாய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற்றது போல் இந்த அக்னிபத் திட்டத்தையும் பிரதமர் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.