பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற வரும் 20, 21 ஆகிய தேதிகளில் கர்நாடகத்திற்கு வருவதாக மாநிலத்தின் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இந்த வருகையின்போது பெங்களூரு புறநகர் ரயில்வே திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் டாக்டர் அம்பேத்கர் பொருளியல் நிறுவன நிகழ்ச்சியைத் தொடக்கிவைக்கிறார். பின்னர் யோகா நிகழ்விலும் பங்கேற்பார்.
பிரதமரின் வருகை குறித்து பசவராஜ் பொம்மை கூறியதாவது:
“வரும் 20, 21 தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு மற்றும் மைசூருக்கு வர வுள்ளார். பிரதமரின் நிகழ்ச்சி விவரங்கள் வந்துள்ளன. அனைத்து நிகழ்வுகளுக்குமான ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.ஜூன் 20 அன்று பிரதமர் காலை 11:55 மணிக்கு பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமான தளத்திற்கு வரவுள்ளார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பெங்களூரு அறிவியல் கழகத்திற்கு சென்று அங்கு நடைபெறும் இரண்டு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். 850 படுக்கை வசதி கொண்ட ஆராய்ச்சி மருத்துவமனையையும் அவர் தொடங்கி வைக்கிறார் ” என்றார்.
பெங்களூரு அறிவியல் கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோமகட்டாவிற்கு செல்லும் பிரதமர் பெங்களூரு புறநகர் ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல சாமுண்டிமலைக்கு செல்லும் பிரதமர் சாமுண்டீஸ்வரி தெய்வத்தினை வழிபட்டு பின்னர் லிங்காயத்து சமூக மக்களைச் சந்திக்க உள்ளார்.
ஜூன் 21 அன்று மைசூரில் அரண்மனைத் திடலில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கெடுத்துக் கொள்கிறார்.