மும்பை: மும்பை வாழ் மக்கள் இன்று காலை கனமழையில் தான் கண்விழித்தனர். நாட்டின் வணிக நகரமாக விளங்கும் மும்பை, ஆண்டுதோறும் கனமழை காரணமாக அல்லல்பட்டு வரும் நிலையில், அங்கும் பருவமழைக் காலம் தலைக்காட்டத் தொடங்கியிருக்கிறது.
மும்பையில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இரண்டு நாள்களுக்கு முன்பு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நள்ளிரவு முதல் கனமழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.
இதையும் படிக்க.. கூகுள் மேப்ஸ் மூலம் சுங்கக் கட்டணத்தை அறியலாம்: எப்படி தெரியுமா?
மகாராஷ்டிரத்தில் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று திங்களன்றே மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த வாரத்தில் மகாராஷ்டிரத்தில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
சென்னையில் நேற்று மாலை முதல் ஆங்காங்கே பரவலாக கனமழை பெய்த நிலையில், மும்பையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. வாகன ஓட்டிகள் கனமழைக்கிடையே வாகனங்களை கடும் சிரமத்துக்கு இடையே ஓட்டிச் சென்ற காட்சிகளை மும்பையின் பல பகுதிகளில் காண முடிந்தது.