சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் 20 பேர் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ளதால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
முதல்வர் பதவிக்கு தான் தகுதியானவன் இல்லை என்று சிவசேனை எம்எல்ஏக்கள் தெரிவித்தால் பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என்று கூறிய முதல்வர் உத்தவ் தாக்கரேன், நேற்று தெற்கு மும்பையில் உள்ள தனது அதிகாரபூா்வ இல்லத்தில் இருந்து வெளியேறிய தெற்கு பாந்தராவில் உள்ள தனது சொந்த வீட்டில் குடியேறினாா்.
இதனிடையே, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலிருந்து சிவசேனை வெளியேற வேண்டுமென சிவசேனையை சேர்ந்த மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க | முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாா்: உத்தவ் தாக்கரே
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் கூறுகையில்,
அமலாக்கத்துறை அழுத்தத்தின் கீழ் கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் உண்மையான பாளாசாஹேப்பின் பக்தர் அல்ல. நாங்கள் பாளாசாஹேப்பின் உண்மையான பக்தர்கள். என்ன அழுத்தம் வந்தாலும் உத்தவ் தாக்கரேவுடன் தொடர்ந்து நிற்போம். நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது தெரியும் எது சரி, எது தவறு என்று.
நான் எந்த முகாமைப் பற்றியும் பேச விரும்பவில்லை. கட்சியைப் பற்றிப் பேசுவேன். இன்றுவரை எங்கள் கட்சி வலுவாக இருக்கிறது. முகாமில் இருப்பவர்களில் 20 எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் மும்பைக்கு வந்ததும் தெரிந்துகொள்வீர்கள். எந்த சூழ்நிலையில் இந்த எம்எல்ஏக்கள் விட்டுச்சென்றார்கள் என்பது விரைவில் தெரியவரும் என்றார்.
இதையும் படிக்க | சட்டப்பேரவை கலைப்பா? பாஜக ஆட்சியா? மகாராஷ்டிரத்தில் தொடரும் குழப்பம்