அசாமில் ஏற்பட்ட கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 93 பேர் பலியாகினர்.
அசாம் மாநிலத்தில் கடந்த ஜூன் 13-ம் தேதி முதல் பெய்துவரும் கனமழையால், மாநிலத்தின் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில், 34 மாவட்டங்களான பஜாலி, பக்சா, பர்பேடா, பிஸ்வநாத், போங்கைகான், கச்சார், சிராங், தர்ராங், தேமாஜி, துப்ரி, திப்ருகர், திமா-ஹசாவ், கோல்பாரா, கோலாகாட், ஹைலகண்டி, ஹோஜாய், ஜோர்ஹத், கம்ரூப் (எம் காம்ரூப், ), கர்பி அங்லாங் மேற்கு, கரீம்கஞ்ச், கோக்ரஜார், லக்கிம்பூர், மஜூலி, மோரிகான், நாகோன், நல்பாரி, சிவசாகர், சோனித்பூர், தெற்கு சல்மாரா, தமுல்பூர், டின்சுகியா மற்றும் உடல்குரி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கோபிலி, தேஜ்பூர், சோனித்பூர், குவஹாத்தி கம்ரூபி கோல்பாரா துப்ரி, சுபன்சிரி, நாகோன் உள்பட பல ஆறுகளில் அபாய அளவை விட அதிகளவில் நிரம்பியுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேர நிலவரப்படி வெள்ளப்பெருக்கால் 12 பேர் பலியானதாகவும் 8 பேர் மாயமானதாகவும் அம்மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது. இதனால், இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கனமழையால் 54.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,81,849 பேர் 845 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.