மகா விகாஸ் கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏக்கள் அக்கட்சிக்கு எதிராக திரும்பியுள்ளதால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
இதையடுத்து, மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் கூட்டணியில் உள்ள காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ்- சிவசேனை கட்சிகள் கூட்டாகவும் தனித்தனியாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான மல்லிகார்ஜுன கார்கே, 'மகாராஷ்டிரத்தில் ஒரு நிலையான அரசாங்கத்தை சீர்குலைத்து மாநிலத்தில் தங்கள் ஆட்சியை அமைப்பதற்கு பாஜக முயற்சித்து வருகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்காகவும் இதைச் செய்கிறார்கள். நாங்கள் அனைவரும் (காங், என்சிபி, சிவசேனை) மகா விகாஸ் கூட்டணியை வலுப்படுத்துவோம் என்று கூற விரும்புகிறேன்.
எங்களது கட்சி மகா விகாஸ் கூட்டணியுடன் நிற்கும், நாங்கள் ஒன்றாகச் செயல்பட விரும்புகிறோம். தற்போதைய மகாராஷ்டிர அரசு மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளைச் செய்து வருகிறது. மகாராஷ்டிர அரசை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. கடந்த காலத்தில் கர்நாடகம், மத்தியப் பிரதேசம், கோவாவிலும் இதைத்தான் செய்தார்கள்' என்று தெரிவித்தார்.