பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே காமாட்சிபாளையம் பகுதியில் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றி வரும் துணை ஆய்வாளர், அபராதம் வசூலிப்பதிலேயே ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.
எம். சிவன்னா என்ற போக்குவரத்துக் காவலர் ஒரே நாளில் அதுவும் முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை, ஜனனபாரதி சந்திப்புப் பகுதியில் போக்குவரத்துக் காவலராக பணியாற்றி, சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடமிருந்து 2.04 ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளார்.
காமாட்சிபாளையம் போக்குவரத்துக் காவல்துறை இது பற்றி புகைப்படத்துடன் சுட்டுரையில் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க | என்ன, ஓ. பன்னீர்செல்வம் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரா ?
இவர் அவ்வழியாகச் சென்ற 249 வாகன ஓட்டிகளிடமிருந்து சாலை விதிகளை மீறியதாக அபராதம் வசூலித்துள்ளார். அதிகபட்சமாக, ஒரு எஸ்யுவி உரிமையாளரிடமிருந்து, தவறான இடத்தில் தனது வாகனத்தை நிறுத்தியிருந்ததாகக் கூறி கடந்த ஆறு மாதங்களில் நகரின் பல்வேறு பகுதிகளில் பதியப்பட்ட 36 அபராதப் பதிவுகளின் அடிப்படையில் ரூ.36,000-ஐ அவர் வசூலித்துள்ளார். காமாட்சிபாளையம் போக்குவரத்துக் காவல்துறையினரால் ஒரு நாளில் வசூலிக்கப்பட்ட அதிகபட்ச தொகையாக இது இருப்பதாக சிவன்னா கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாமே.. விட்டதைப் பிடித்த விக்ரம் (மாதித்தன்)? தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல்...
இது குறித்து அவர் கூறுகையில், பொதுவாக இருசக்கர வாகனங்கள், கார்களை மட்டுமே நிறுத்தி வாகன சோதனை நடத்துவோம். இந்த எஸ்யுவி கார் உரிமையாளரைத் தவிர மேலும் சில இருசக்கர வாகன ஓட்டிகளும் பல இடங்களில் சாலைவிதிகளை மீறி 15க்கும் மேற்பட்ட வழக்குகளை வைத்திருந்தனர். பெரும்பாலானவை, தவறான இடத்தில் வாகனத்தை நிறுத்துவது, சிக்னலை மதிக்காமல் செல்வது, ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பது போன்றவைதான் என்கிறார்.