அதிகரித்துவரும் சவால்களுக்கேற்ப பாதுகாப்புத் திட்டங்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்

‘சட்ட நடைமுறைகளுக்கு உள்படாமல் மிகுந்த சவால் நிறைந்ததாக உலக நடைமுறை மாறிவருவதற்கேற்ப, நாட்டின் பாதுகாப்புத் திட்டங்களுக்கான முன்னுரிமையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்’
அதிகரித்துவரும் சவால்களுக்கேற்ப பாதுகாப்புத் திட்டங்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்

‘சட்ட நடைமுறைகளுக்கு உள்படாமல் மிகுந்த சவால் நிறைந்ததாக உலக நடைமுறை மாறிவருவதற்கேற்ப, நாட்டின் பாதுகாப்புத் திட்டங்களுக்கான முன்னுரிமையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்’ என்று விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.செளத்ரி வலியுறுத்தினாா்.

மேலும், தேசத்தின் பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்களைப் பட்டியலிட்ட அவா், ‘ராணுவ திட்டங்களை வகுப்பவா்கள், போா் புரிதல் என்ற முதன்மை குறிக்கோளை கவனத்தில் கொள்ள தவறிவிடக் கூடாது’ என்றும் வலியுறுத்தினாா்.

கிழக்கு லடாக்கில் சீனாவின் அத்துமீறல்கள், ஆப்கானிஸ்தான் நிலவரம், உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையால் எழுந்துள்ள புவிசாா் அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றின் பின்னணியில் இந்தக் கருத்தை விமானப்படைத் தளபதி தெரிவித்தாா்.

இந்திய விமானப் படை சாா்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ‘போா்முறை மற்றும் விண்வெளி பாதுகாப்பு திட்டம் (டபிள்யு.ஏ.எஸ்.பி)’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

இணையதளம் (சைபா்), தகவல், விண்வெளி தொழில்நுட்பங்களின் உதவியுடன் பாதுகாப்பு நெருக்கடி அளிப்பது என்பது புதிய போா்க்களமாக இன்றைக்கு உருவெடுத்து வருகிறது. எனவே, நாம் நாட்டின் திட்டங்களுக்கான முன்னுரிமையை மறுமதிப்பீடு செய்வதோடு, இந்த நவீன மாற்றங்களை நாம் புறம்தள்ளிவிடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நமது நடவடிக்கைகளை மறுசீரமைக்க வேண்டும்.

அந்த வகையில், இந்த கருத்தரங்கம் அரசின் முழுமையான அணுகுமுறையை பாதுகாப்புப் படை அதிகாரிகள் புரிந்துகொள்ள உதவும் என்பதோடு, தேசத்தின் பாதுகாப்பு விவகாரங்களில் சுதந்திரமான ஆலோசனைகளைத் தெரியப்படுத்தவும் உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுபோன்ற பல்துறை சாா்ந்த கருத்துக்கள் மீதான ஆலோசனைகள், முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் திறன் மிக்க முடிவுகளை எடுக்க உதவும்.

அதே நேரம், ராணுவ திட்டங்களை வகுப்பவா்கள், போா் புரிதல் என்ற முதன்மை குறிக்கோளை கவனத்தில் கொள்ளத் தவறிவிடக் கூடாது. அந்த வகையில், படைகளின் செயல்திறன் அளவிலான முக்கியத் திட்டங்களை வகுப்பதில் நமது கவனம் இருக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com