தெலங்கானாவில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் இடைநிலைத் தேர்வில் முதல் தரத்தில் வென்று சாதனை படைத்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள யூசுஃப்குடா பகுதியில் வசிக்கும் வீணா மற்றும் வாணி பிறக்கும்போதே தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்.
இருவரும் சமீபத்தில் இறுதியாண்டு இடைநிலைத் தேர்வை எழுதினர் (தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பைப்போல தெலங்கானாவில் இடைநிலைத் தேர்வு முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு).
இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், மொத்தம் 1,000 மதிப்பெண்களுக்கு வீணா 712 மதிப்பெண்களும் வாணி 707 மதிப்பெண்களைப் பெற்றதுடன் இருவரும் முதல் தரத்தில் வென்று அசத்தியுள்ளனர்.
இதையும் படிக்க: மும்பை சர்வதேச விமான நிலையத்தின் பெயர் மாற்றம்
பிறக்கும்போதே தலை ஒட்டிப் பிறந்தாலும் தன்னம்பிக்கையால் தேர்வில் வென்றதற்கு அவர்களைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக, அம்மாநில பழங்குடியினர் மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்யாவதி ரத்தோட் இவர்களின் உயர்கல்விக்கான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என உறுதியளித்துள்ளார்.
மேலும், வீணாவும் வாணியும் அடுத்ததாக பட்டயக் கணக்காளர்(Chartered Accountant) படிப்பில் சேர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.