உதய்பூர் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அதேநேரத்தில் முகம்மது நபிகள் குறித்து அவதூறாகப் பேசிய நூபுர் சர்மா கைது செய்யப்பட வேண்டும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ஒவைஸி, தீவிரவாதம் தொடர்ந்து பரவுகிறது. ராஜஸ்தானின் உதய்பூரில் நடந்த கொடூரமான கொலைக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். அதற்கு எந்த நியாயமும் இருக்க முடியாது. இத்தகைய வன்முறைகளை எதிர்ப்பதே எங்கள் கட்சியின் நிலையான நிலைப்பாடு. சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம்.
நாட்டில் தீவிரவாதம் எந்த அளவுக்கு பரவியுள்ளது என்பதற்கு உதய்பூர் படுகொலையே எடுத்துக்காட்டு. சட்டம் அனைவருக்கும் சமம்.
இதுகுறித்து மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் . சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கப்பெற வேண்டும்.
நூபுர் சர்மாவை கட்சியில் இருந்து நீக்கியது போதாது. அவர் கைது செய்யப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.
உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட தையல்காரர் கன்னையா லால், முகம்மது நபிகள் பற்றி அவதூறாகப் பேசிய பாஜக நிர்வாகி நூபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
இதனிடையே இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | உதய்பூர் படுகொலை: என்.ஐ.ஏ. விசாரணை நடத்த உத்தரவு!