ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அமர்நாத் யாத்திரையின் முதல் கட்ட குழுவின் பயணத்தை புதன்கிழமை தொடங்கிவைத்தார். 4,890 பக்தர்கள் ஜம்மு நகரம் பகவதி நகர் முகாமிலிருந்து காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் மற்றும் பால்டால் முகாம்களை நோக்கி பயணத்தை பலத்த பாதுகாப்புடன் தொடங்கினர்.
அமர்நாத் பனிக்குகை நோக்கிய 43 நாட்கள் பயணம், காஷ்மீரில் உள்ள இருமுகாம்களில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 30) தொடங்கி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி முடிவடைகிறது.
அமர்நாத் யாத்திரைக்கு 3 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் பதிவுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பக்தர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுடைய பயணத்தைக் கண்காணிக்க, ரேடியோ அலைவரிசை அடையாளமுறையை நிகழாண்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. முகாம்கள் மற்றும் தங்குமிடங்களில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக யாத்திரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.