உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில் யாத்ரீகர்களுக்காக இந்தாண்டு மே 6-ஆம் தேதி காலை 6.25-க்கு கோயிலின் நடை திறக்கப்படுகிறது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஓம்காரேஷவர் கோயிலில் நடைபெற்ற வழிபாடுகளுக்குப் பிறகு சிவபெருமானின் பிரசித்தி பெற்ற இமயமலை கோயிலைத் திறப்பதற்கான தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டது.
விருச்சிக லக்னத்தில் கோயில் கதவுகள் திறக்கப்படும் என்று பத்ரி-கேதார் கோயில் கமிட்டி அதிகாரி ஹரிஷ் கௌட் கூறினார். கேதார்நாத் தலைமை பூசாரி ராவல் பீமாசங்கர் லிங் மற்றும் பத்ரி-கேதார் கோயிலின் சமிதி தலைவர் அஜேந்திர அஜய் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
சிவபெருமானின் பஞ்சமுகி(ஐந்து முகம்) சிலை மே 2ஆம் தேதி இங்குள்ள ஓம்காரேஷ்வர் கோயிலில் இருந்து கேதார்நாத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்படும் என்று கௌட் கூறினார்.
குளிர்காலத்தையொட்டி கடந்தாண்டு நவம்பரில் கோயில் நடை சாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.