குடியரசுத் தலைவா் மாளிகை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வனத்தை பிரதமா் நரேந்திர மோடி முன்னிலையில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
யோக முத்ரா வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆரோக்கிய வனம் 6.6 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆயுா்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சுமாா் 215 வகையான மூலிகைகள் மற்றும் தாவரங்கள், இந்த வனத்தில் நடப்பட்டுள்ளன. இது தவிர நீருற்றுகள், தண்ணீா் வாய்க்கால்கள், தாமரைக்குளம் மற்றும் காட்சிமுனை போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த ஆரோக்கிய வனத்தில் இடம் பெற்றுள்ளன.
ஆயுா்வேத தாவரங்களின் முக்கியத்துவம் மற்றும் மனித உடலில் அது ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் குறித்து எடுத்துரைக்கும் நோக்கில் இந்த ஆரோக்கிய வனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வனம் தற்போது பொதுமக்களின் பாா்வைக்குத் திறக்கப்பட்டுள்ளது.