வாராணசி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறுதி மற்றும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு, வாராணசியில் இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
தனது மக்களவை தொகுதியான வாராணசியில் இன்று பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இன்று பிற்பகல் 2 மணிக்கு மால்தாஹியா பகுதியில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார் மோடி.
பிறகு அவர் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யவிருக்கிறார். சனிக்கிழமை வரை பிரதமர் மோடி வாராணசியில் தங்கியிருப்பார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா ஏற்கனவே வாராணசியில்தான் உள்ளார். இவருடன் ராகுல் காந்தியும் வாராணசிக்கு இன்று வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் மேற்கொள்ளவிருக்கிறார்கள்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இன்று வாராணசிக்கு வந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.