பிகாரின் பாகல்பூர் வெடிவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
பிகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள கஜ்வலிசக் பகுதியில் வீடு ஒன்றில் நேற்றிரவு 11.45 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர், காவல்துறையினருடன் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் வெடிவிபத்து ஏற்பட்ட வீடு முற்றிலும் தரைமட்டமானது. மேலும் அருகிலிருந்த 3 வீடுகளின் சுவர்களும் சேதமடைந்தன. விபத்தின்போது வெடிச்சத்தம் பல கிலோமீட்டர் வரை கேட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க- சசிகலாவுடன் ஓபிஎஸ் சகோதரர் சந்திப்பு
முதற்கட்ட விசாரணையில் வெடிவிபத்து ஏற்பட்ட வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பிகார் முதல்வர் நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
மேலும் பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “பிகார் மாநிலம் பாகல்பூரில் நடந்த குண்டுவெடிப்பால் உயிர் இழப்பு செய்தி வேதனை அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த சம்பவம் தொடர்பான நிலைமை குறித்து முதல்வர் நிதிஷ்குமாரிடம் பேசினேன். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதனிடையே பாகல்பூர் வெடிவிபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு பிகார் முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.