ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக சஞ்சீவ் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் கோடைக்காலம் முதல் விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் முன்னாள் படைப்பிரிவு தலைவரும் நேபாள ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷனின் நிர்வாகியுமான கேப்டன் பி.பி. சிங்கை பொறுப்பு மேலாளராக ஜெட் ஏர்வேஸ் நியமித்ததை தொடர்ந்து, இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, பொறுப்பு மேலாளராக சுதீர் கெளர் பதவி வகித்துவந்தார்.
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸின் தலைமை செயல் அலுவலராக பதவி வகித்துவந்த விபுலா குணதிலகாவை தலைமை நிதி அதிகாரியாக ஜெட் ஏர்வேஸ் சமீபத்தில் நியமித்திருந்தது.
விமானத்துறையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் சஞ்சீவ் கபூர். ஆசிய, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க விமானத்துறையில் நிர்வாக ஆலோசகராகவும் முதலீட்டு ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
தற்போது, ஓபராய் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ள கபூர், விஸ்டாரா மற்றும் குறைந்த விலையில் விமானத்தை இயக்கும் ஸ்பைஸ்ஜெட், கோ ஏர் நிறுவனத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார்.
இதையும் படிக்க | உக்ரைனில் இந்திய மாணவர் காயம்: அமைச்சர் தகவல்
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தங்களது விமானங்களை இயக்கவில்லை. இதையடுத்து, ஜாலான் கல்ராக் கூட்டு நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கியது.