அஸம்கார்: உத்தரப் பிரதேசத்தில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் ஆண்களும் பெண்களும் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஒரு சில வாக்குச்சாவடிகளிலிருந்து வரும் புகைப்படங்கள் நெஞ்சை நெகிழச் செய்வதாக உள்ளது. வாக்குப்பதிவன்று விடுமுறை அளித்து, அனைத்து வசதிகளும் இருக்கும் நகரப் பகுதிகளிலேயே ஜனநாயகக் கடமையாற்ற மறுக்கும் குடிமக்களுக்கு இடையே, பல்வேறு இடர்களையும் தாண்டி வாக்களிக்க வரும் சாமானியங்கள்தான் இன்னமும் ஜனநாயகத்தின் நம்பிக்கைப் பேரொளிகளாக விளங்குகிறார்கள் என்று தோன்றுகிறது.
அந்த வகையில், ஹரிலால் பிரஜாபதி (76) என்ற முதியவர், தனது மனைவியுடன், தன்னால் வேறு எந்த வாகனத்திலும் வர முடியாது என்பதால், மாட்டு வண்டியில் வந்து வாக்களித்தார்.
எனக்கு முதுகெலும்பில் பிரச்னை உள்ளது. எனது மனைவிக்கும் உடல்நிலைக் குறைவு என்பதால் மாட்டுவண்டியில் வந்தோம். எங்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. வெறும் 500, 1000 கொடுத்தால் எங்களை குணப்படுத்த முடியுமா? என்கிறார் கேள்விக்கு மறுகேள்வியாக.