பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி ஒவ்வொரு சாமானியனின் வெற்றி எனவும் பிற மாநில மக்களும் தங்களை நம்பத் தொடங்குவார்கள் எனவும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) நடைபெற்று வருகிறது.
இதில் 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாபில் ஆம் ஆத்மி பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.
காலை 11. 30 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 88 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் பஞ்சாபை ஆம் ஆத்மி கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து தில்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவருமான மணீஷ் சிசோடியா கூறுகையில், 'கேஜரிவாலின் மாதிரி ஆட்சிக்கு பஞ்சாப் வாய்ப்பு அளித்துள்ளது. இதன் மூலமாக கேஜரிவாலின் ஆட்சி மாதிரி, தேசிய அளவில் நிறுவப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு சாமானியனின் வெற்றி.
கோவா, உத்தரகாண்ட் மற்றும் உ.பி.யிலும் நாங்கள் எங்களுடைய வேட்பாளர்களை நிறுத்தியிருந்தோம், ஆனால் எங்களது முழு கவனம் பஞ்சாபில் இருந்தது. படிப்படியாக மற்ற மாநில மக்களும் எங்கள் கட்சியை நம்பத் தொடங்குவார்கள்' என்று தெரிவித்தார்.