மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த நிலையில், பாஜக 32 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்றது.
பஞ்சாப், கோவாவில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததையடுத்து, தற்போது மணிப்பூரிலும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.
பஞ்சாபில் ஆம் ஆத்மியும், கோவாவில் பாஜகவும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதேபோன்று மணிப்பூரிலும் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது.
மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 32 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. என்பிபி 7 இடங்களில் வென்று எதிர்கட்சி நிலையை அடைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களிலும், 5 இடங்களில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன. .
நாகா மக்கள் முன்னணி 5 இடங்களிலும், குகி மக்கள் கூட்டணி 2 இடங்களிலும், சுயேட்சை 3 இடங்களிலும் வென்றுள்ளனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, மணிப்பூரில் பாஜக 37.8 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. என்பிபி 17.3 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 16.83 சதவிகிதமும், ஐக்கிய ஜனதா தளம் 10.77 சதவிகிதமும் பெற்றுள்ளன.