பதவியேற்பு விழா பகத் சிங் அருங்காட்சியம் அமைந்துள்ள கிராமத்தில் நடைபெறும் என ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி, பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117-ல் 91 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. இதனால் பஞ்சாபில் ஆம் ஆத்மி, ஆட்சியைப் பிடிக்கிறது.
இதையடுத்து பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் பஞ்சாப் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கட்சி அலுவலகம் முன்பு கட்சித் தொண்டர்களிடம் பேசிய அவர், 'பஞ்சாப் முதல்வரின் பதவியேற்பு விழாவானது ராஜ் பவனுக்கு பதிலாக கட்கர் காலன் கிராமத்தில் நடைபெறும். அரசு அலுவலகங்களில் முதலமைச்சரின் புகைப்படங்கள் இடம் பெறாது. அதற்கு பதிலாக அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் படங்கள் இருக்கும்' என்று பேசியுள்ளார்.