நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதுதொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘‘நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருகிறது. இதனால் கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட பெரும்பாலான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது.
இந்நிலையில், தில்லியில் நாட்டின் தற்போதைய கரோனா பாதிப்பு நிலவரம், அந்தத் தொற்றுக்கு எதிரான பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடி ஆய்வு மேற்கொண்டாா். இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்’’ என்று தெரிவித்தன.