பிரதமர் நரேந்திர மோடியின் 'புதிய இந்தியா' கனவு நிறைவேறும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து வரலாறு படைக்கிறது. உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களிலும் பாஜகவே முன்னிலை வகிக்கிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றுகிறது.
இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் பொம்மை கூறியதாவது:
"4 மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்கும். 2024-இல் மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு அமையவுள்ளது தெளிவாகிவிட்டது. பிரதமர் மோடியின் புதிய இந்தியா கனவு நிறைவேறும். கர்நாடகத்தில் 2023-இல் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது."
கர்நாடகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.