பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வருகிற 16 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை இன்று தில்லியில் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார். அப்போது தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் உடனிருந்தார்.
இதையடுத்து பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வருகிற 16 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகவும் இதற்காக கேஜரிவாலுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மார்ச் 13 ஆம் தேதி அமிர்தசரஸில் தில்லி முதல்வர் கேஜரிவாலுடன் பகவந்த் மான், சாலைப் பேரணி நடத்தவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பஞ்சாபில் புதிய அரசின் பதவியேற்பு விழா, ஆளுநா் மாளிகைக்குப் பதிலாக சுதந்திரப் போராட்டத் தியாகி பகத் சிங் பிறந்த ஊரான கத்கா் கலன் கிராமத்தில் நடைபெறும் என பகவந்த் மான் கூறியிருந்தார்.