ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் இன்று தில்லியில் சந்திக்கவுள்ளார்.
பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் மற்றும் வலுவான சிரோமணி அகாலி தள கட்சிகளை தோல்வி அடைய செய்து ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியை பதிவு செய்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
தில்லிக்கு செல்வதற்கு முன்பு சங்ரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றதற்கு கேஜரிவாலை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளேன்" என்றார்.
அரசு அமைப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பஞ்சாப் ஆளுநரை சனிக்கிழமை சந்திக்கவுள்ளதாக பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நவன்ஷஹர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீக கிராமமான கட்கர் கலனில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. திமிர் பிடித்தவர்களை மக்கள் தோற்கடித்து சாமானியர்களை வெற்றி பெறச் செய்துள்ளனர்" என்றார்.
துரி தொகுதியில் போட்டியிட்ட மான், 58,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். முன்னாள் முதல்வர்கள் சரண்ஜித் சிங் சன்னி, பிரகாஷ் சிங் பாதல், அமரிந்தர் சிங் போன்ற முக்கிய தலைவர்கள் பஞ்சாப் தேர்தலில் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.