
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதையடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸை தோற்கடித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. தில்லிக்கு வெளியே அக்கட்சி முதல் முறையாக ஆட்சியமைக்கவுள்ளது.
தில்லி யூனியன் பிரதேசத்தை அடுத்து, தற்போது முழு மாநில அந்தஸ்து பெற்ற பஞ்சாபை ஆட்சி செய்யவுள்ளது. பஞ்சாபில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் அக்கட்சி வென்றுள்ளது. கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் இன்று தில்லியில் கேஜரிவாலை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், கேஜரிவாலுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் குறிப்பிடவேண்டிய வெற்றியைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால். கட்சி தொடங்கிய ஒரே தசாப்தத்தில் மாநில எல்லை கடந்து இரண்டாம் மாநிலத்தில் அழுத்தமாகக் காலூன்றியிருக்கும் ஆம் ஆத்மியைப் பாராட்டுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
Congratulations to my friend @ArvindKejriwal and Aam Aadmi party for their sweeping victory. It is commendable that within ten years since it's inception, the party has reigned victorious in another state, Punjab. pic.twitter.com/NGSXyrOLIj
— Kamal Haasan (@ikamalhaasan) March 11, 2022
முன்னதாகவே கமல் ஹாசனும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் நட்பு பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.