கடக்: கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில், முஸ்லிம் பழக்க வழக்கங்களை பின்பற்றச் சொல்லி காதல் கணவர் துன்புறுத்தியதால், விவாகரத்துக் கோரிய மனைவியை, அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
தலையில் 23 முறை வீச்சரிவாளால் வெட்டுக்காயமடைந்த அபூர்வா ஆனந்த் புராணிக் என்ற அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை லவ் ஜிகாத் எனற் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
காவல்துறையினர் இதுபற்றி கூறுகையில், அபூர்வா (26), தனது கணவர் மொஹம்மது ஷிரூர் (30), இந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மாறிய தன்னை, முஸ்லிம் பழக்க வழக்கங்களை கடுமையாக பின்பற்றுமாறு துன்புறுத்தியதாலும், கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகள் இருப்பது தெரிய வந்ததாலும், கணவரிடமிருந்து பிரிந்து தனது மகனுடன், தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இதையடுத்து, விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய நிலையில், அபூர்வாவை வீச்சரிவாளால் வெட்டிவிட்டு, மொஹம்மத் தப்பியோடியுள்ளார். அபூர்வாவின் தலையில் மட்டும் 23 முறை வீச்சரிவாளால் வெட்டப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், தோள்பட்டை, முகம், கைகளிலும் கடுமையான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தான நிலையில்அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெற்றோருக்கு ஒரே மகளான அபூர்வா, கல்லூரியில் படிக்கும் போதே ஆட்டோ ஓட்டும் மொஹம்மதுவை காதலித்து 2018ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டுள்ளார். பிறகு அவர் முஸ்லிம் மதத்துக்கு மதம் மாறியுள்ளார். திருமணமாகி சில ஆண்டுகளில், மொஹம்மது, அபூர்வாவை புர்கா அணியுமாறும், முஸ்லிம் பழக்க வழக்கங்களை பின்பற்றுமாறும் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில்தான் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தது அபூர்வாவுக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து அவர் கணவரிடமிருந்து பிரிந்து வந்து விவாகரத்துக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.