காங்கிரஸ் செயற்குழு கூட்டம், நாளை மாலை 4 மணிக்கு கூடவுள்ளது. ஐந்து மாநில தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழு கூட்டம் நாளை நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சோனியா காந்தி, ராகுல் காந்தியின் தலைமை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டுவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி தேர்தல் செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இது முன்கூட்டியே நடத்த வாய்ப்பிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. அந்த மாநிலத்தில் ஒரே கட்சி தொடா்ந்து 2-ஆவது முறையாகத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
உத்தரகண்டிலும் மணிப்பூரிலும் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. கோவாவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. உத்தரகண்ட் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்கான முன்னோட்டமாகக் கருதப்பட்டதால் இந்தத் தோ்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.
முக்கியமாக உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முடிவுகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. உத்தரப்பிரதேசத்தில் இரட்டை இலக்கு தொகுதிகளில் கூட காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. குறிப்பாக, பிரியங்கா காந்தியின் தீவிர பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்றே கூறலாம்.