புது தில்லி: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு 2021-222 ஆம் நிதியாண்டுக்கு வழங்கப்படும் வட்டியை 8.1 சதவீதக் குறைத்து வழங்குவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது.
இது கடந்த 30 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டி விகித அளவுக்குக் குறைவாகும். 1977-78ஆம் ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீத வட்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 ஆண்டுகளாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி 8.50 சதவீதமாக நீடித்த நிலையில், தற்போது 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
5 கோடிக்கும் அதிகமான தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரா்களைக் கொண்டிருக்கும் இந்த அமைப்பின்
வருங்கால வைப்பு நிதி முதலீடுகளுக்கு மத்திய அரசு அதிக வட்டி வழங்கி வந்தது. 2015-16ஆம் ஆண்டில் இந்த சந்தாதாரா்களுக்கு அதிகபட்சமாக 8.8 சதவீத வட்டி வழங்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு அந்த வட்டி விகிதம் படிப்படியாக குறைக்கப்பட்டது. 2016-17 ஆம் ஆண்டில் 8.65 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில், 2017-18 ஆம் ஆண்டில் மேலும் குறைத்து 8.55 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டது.
2018-19 ஆம் ஆண்டில் 8.65 சதவீதமாக உயா்த்தப்பட்ட நிலையில், 2019-20 ஆம் ஆண்டில் 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது மேலும் 2020-21 ஆம் ஆண்டில் 8.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், 2021-22ஆம் ஆண்டில், சந்தாதாரர்களுக்கு 8.1 சதவீத வட்டி வழங்க மத்திய தொழிலாளா் அமைச்சா் தலைமையிலான தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலா்கள் வாரியக் கூட்டம் இன்று கூடி முடிவெடுத்துள்ளது.
இந்த வட்டிக் குறைப்பு முடிவுக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், இந்த வட்டி விகிதம் நடைமுறைக்கு வரும்.