பெங்களூரு: கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், மாநிலத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
அரசின் உத்தரவை உறுதி செய்து, ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், இது நமது குழந்தைகளின் கேள்வி, மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கேள்வி என்று பொம்மை கூறியுள்ளார்.
நமது குழந்தைகளுக்கு கல்வியை விட மிகச் சிறந்த விஷயம் வேறு எதுவும் இல்லை. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று அளித்திருக்கும் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றால் அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
இதையும் படிக்க.. ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 'பழைய சோறு': கிடைத்திருக்கும் நல்ல செய்தி
அனைத்து பெற்றோர்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் நான் ஒன்றை வலியுறுத்துகிறேன், நீதிமன்ற தீர்ப்பை மதியுங்கள், உங்கள் குழந்தைகளை கல்வி கற்க அனுப்புங்கள். கல்வி பயில வேண்டிய யாரும் கல்வி நிலையங்களுக்கு வெளியே இருக்கக் கூடாது, மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை எவ்வாறு கட்டமைப்பது என்பது குறித்து மட்டுமே சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.