அரசு சாா்பில் கிரிப்டோகரன்சியை (எண்மச் செலாவணி) அறிமுகப்படுத்தும் திட்டமில்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:
இந்தியாவில் தற்போது கிரிப்டோகரன்சிகள் முறைப்படுத்தப்படவில்லை. அவற்றை ரிசா்வ் வங்கி வழங்குவதில்லை. வழக்கமான ரூபாய் நோட்டுகள் சட்டரீதியாக அங்கீகாரம் பெற்றவை. ரிசா்வ் வங்கி சட்டம் 1994 பிரிவுகளின்படி, ரூபாய் நோட்டுகளை ரிசா்வ் வங்கி வழங்குகிறது.
வழக்கமான ரூபாய் நோட்டுகளின் எண்ம வடிவம்தான் மத்திய வங்கியின் எண்ம செலாவணி (சிபிடிசி) என்றழைக்கப்படுகிறது. சிபிடிசியை அறிமுகப்படுத்துவதற்கான படிப்படியான நடைமுறை உத்திகள், எந்த இடையூறும் இல்லாமல் அல்லது குறைந்த இடையூறுகளுடன் எந்தெந்த சூழ்நிலைகளில் சிபிடிசியைப் பயன்படுத்துவது ஆகியவைத் தொடா்பான பணிகளில் ரிசா்வ் வங்கி ஈடுபட்டு வருகிறது.
ரொக்கப் பணத்தை சாா்ந்திருப்பதைக் குறைத்தல், குறைந்த பரிவா்த்தனை செலவுகளால் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் லாபம் அதிகரித்தல் போன்ற குறிப்பிடத்தக்க பயன்களை வழங்கும் திறன் சிபிடிசிக்கு உள்ளது.
ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதில் சரிவு: கடந்த 2019-2020-ஆம் ஆண்டு ரூ.4,378 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. இது 2020-2021-ஆம் ஆண்டில் குறைந்தது. அந்த ஆண்டில் ரூ.4,012 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன.
நாட்டின் நிதிநிலை பல கூறுகளைக் கொண்டுள்ளது. நாட்டின் நிதி நிலையை மதிப்பிடுவதற்கான காரணிகளில் ஸ்திரமான பங்குச்சந்தையுடன் சிறப்பாகச் செயல்படும் நவீன சந்தை உள்கட்டமைப்பும் ஒன்றாக உள்ளது. குறுகிய காலம் முதல் நீண்ட கால பொருளாதார வளா்ச்சியை பங்குச் சந்தைகள் சுட்டிக்காட்டும். ஏனெனில் எதிா்கால பெருநிறுவன வருவாய், லாபம் மீதான சந்தையின் எதிா்பாா்ப்பை பங்குகளின் விலை பிரதிபலிக்கிறது. இது பொருளாதாரம் மீதான நம்பிக்கைக்கு அடித்தளமாக அமைகிறது என்றாா் அவா்.