லக்னௌ: உத்தரபிரதேச தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து பெட்டிங் வைத்து, தனது பைக்கை இழந்த இளைஞருக்கு, புதிய பைக்கை வாங்கிக் கொடுத்துள்ளார் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.
உத்தர பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த அவதேஷ் குஷ்வாஹா என்பவர், தனது பக்கத்துவீட்டுக்காரரிடம் ஒரு பெட் கட்டியுள்ளார். அதில், உத்தர பிரதேச தேர்தலில் சமாஜவாதி கட்சிதான் வெற்றி பெறும், இல்லையென்றால் நான் எனது பைக்கைக் கொடுத்து விடுககிறேன் என்று. அதற்கு பக்கத்துவீட்டுக்காரர் பிலாடாவும், பாஜகதான் வெற்றி பெறும் இல்லையென்றால் தான் தனது ஆட்டோவை கொடுத்து விடுவதாகக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க.. தந்தை-மகனை ஒன்று சேர்த்த பஞ்சாப் முதல்வர் பதவியேற்பு விழா
இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. இருவரும் சேர்ந்து 100 ரூபாய் மதிப்புள்ள பத்திரத்தை வாங்கி வந்து 6 பேரின் கையெழுத்துடன் இதனை எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.
மார்ச் 10ஆம் தேதி தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்டது. பத்திரத்தில் சொன்னபடி அவதேஷ் தனது பைக்கை பிலாடாவுக்கக் கொடுத்துவிட்டார். இந்த சம்பவத்தை பத்திரத்துடன் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மற்றொருவர் அவதேஷ் தனது வாழ்வாதாரத்தையே இழந்துவீட்டதாகக் கூறி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துவிட்டார்.
அவ்வளவுதான் இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட, உடனடியாக அவதேஷை சமாஜவாதி கட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்த கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஒரு லட்சம் ரூபாய்க்கு காசோலையை வழங்கி, புதிய பைக் வாங்கிக் கொள்ளுமாறும், இனி எதிர்காலத்தில் இதுபோல பெட்டிங்கில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பி வத்தார்.
அவதேஷ், சின்ன சின்ன மின்சாரப் பொருள்களை பைக்கில் வைத்து வீடு வீடாகச் சென்று விற்று வந்தது குறிப்பிடத்தக்கது.