கேரளத்தில் ‘மீடியாஒன்’ தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், அந்த உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தின் அடிப்படையில், கேரளத்தில் ஒளிபரப்பப்பட்ட ‘மீடியாஒன்’ சேனலுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை புதுப்பிக்க மத்திய அரசு மறுத்தது. இதையடுத்து, அந்த சேனல் ஒளிபரப்பை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நிறுத்தும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, உரிமத்தை புதுப்பிக்க இயலாது என்ற மத்திய அரசின் உத்தரவை எதிா்த்து கேரள உயா்நீதிமன்றத்தில் சேனல் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. இதை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி அமா்வு, மத்திய அரசின் உத்தரவை உறுதி செய்து தீா்ப்பளித்தது. தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து தொலைக்காட்சி நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமா்வும் அந்த உத்தரவை உறுதி செய்தது.
இதனை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ‘மீடியாஒன்’ சேனலை நடத்தும் மாத்யமம் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த், விக்ரம்நாத் ஆகியோா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், செய்தி மற்றும் நடப்பு நிகழ்வுகளை ஒளிபரப்பும் இந்த சேனல், வழக்கம்போல செயல்படலாம். இந்த வழக்கில் அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மத்திய அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்கப்படுகிறது என்று கூறினா்.
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மாா்ச் 26-ஆம் தேதிக்குள் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.