ஜம்மு-காஷ்மீரில் மார்ச் 2021 முதல் 175 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் காவல் படைத் தலைவர் (சிஆர்பிஎஃப்) குல்தீப் சிங் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
"ஜம்மு-காஷ்மீரில் மார்ச் 2021 முதல் 175 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 183 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் 19 மாவோயிஸ்டுகளையும் சிஆர்பிஎஃப் கொன்றுள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மூலம் 699 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளனர். மாவோயிஸ்ட் பிரிவு அல்லது அதன் ஆதரவாளர்கள் என 598 பேர் சத்தீஸ்கரில் சரணடைந்துள்ளனர். வடகிழக்கு பகுதியில் 287 பேர் சரணடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் 253 ஆயுதங்களும், 96 கிலோ வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இடதுசாரி தீவிரவாதம் நிறைந்த பகுதிகளில் 164 ஆயுதங்கள் மற்றும் 1,493 கிலோ வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வடகிழக்குப் பகுதியில் 128 ஆயுதங்களும், 26 கிலோ வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 42 விஐபி-க்களுக்கு விவிஐபி பாதுகாப்பு கொடுக்கப்பட்டது."