மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் பயணம் செய்த 60 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
போபாலில் இருந்து ஹைதராபாத் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது நேற்றிரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பாக ஷாபூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவநாராயண் முகதி கூறுகையில்,
மாவட்டத் தலைமையகத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்.69ல் ஓடும் பேருந்தில் தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் புகை ஏற்படத் தொடங்கியது, பயணிகள் அனைவரும் பேருந்தை விட்டு விரைவாகக் கீழே இறங்கினர். இதனால், யாருக்கும் எந்த தீக்காயம் ஏற்படவில்லை.
பேருந்து மற்றும் பயணிகள் வைத்திருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது, பின்னர் சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.