புது தில்லி: முதுகு தண்டுவட சிதைவால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனுக்கு இந்திய முதுகுதண்டுவட காயங்களுக்கான சிகிச்சை மைய மருத்துவர்கள், மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இரண்டு முறை நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையின் பலனாக, சிறுவன் ஆக்ஸிஜன் உதவியின்றி வாழவும், தானாகவே நடக்கவும் வழியேற்றபட்டுள்ளது.
பிறந்தது முதலே முதுகு தண்டுவட சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. முதுகு தண்டுவட சிதைவால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, எங்குச் சென்றாலும் ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவியோடு செல்ல வேண்டிய சிக்கல் இருந்தது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹிம்மேஷ்வர், கைபோஸ்கோலியோஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு 12 வயதாகும் போது நோய் தீவிரமடைந்தது. நிற்கும் போது இவரது நிலைமை மிகவும் மோசமடைந்தது. நேராக நடக்கவும் முடியாமல் அவதிப்பட்டு வந்தார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அங்குர் நந்தா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. காலநிலை மாற்றம் நம்மை என்ன செய்யும் என்று கேட்பவர்களுக்கு..
இவரது ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்ஸிஜன் அளவானது 48 சதவீதம்தான் இருந்தது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக இவர் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு முதுகு தண்டுவட சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையாகும், முதுகு தண்டுவடத்தை சீரமைக்கும்போது, அதனுடன் இணைந்த நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டால் கால்கள் செயலிழக்கும் அபாயம் கூட நேரிடலாம். இந்த அறுவை சிகிச்சையை சவாலாக ஏற்று, அவரது எலும்புகள் மற்றும் இடுப்பு எலும்புகளில் உலோக பின் மற்றும் வளையங்கள் பொருத்தி, முதுகெலும்பை நேர் செய்யும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இப்படியே அவர் 2 மாதங்கள் வைக்கப்பட்டிருந்து, நுரையீரல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு பிறகு, அவருக்கு மூச்சு விடுவதில் சிக்கல் குறைந்து, தானாகவே நடக்கவும் முடிந்தது. இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சையும் முடிந்து, சிறுவனுக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது. தற்போது அவர் ஆக்ஸிஜன் உதவியின்றி, இயல்பான வாழ்க்கையை வாழ முடிகிறது என்றார் மருத்துவர் நந்தா.