பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தினார். காஷ்மீரில் கடந்த 2018ஆம் ஆண்டு, 417-ஆக இருந்த பயங்கரவாத சம்பவங்களின் எண்ணிக்கை, 2021ஆம் ஆண்டில் 229-ஆக குறைந்துள்ளதையும், 2018ஆம் ஆண்டில் 91 ஆக இருந்த வீரர்களின் பலி எண்ணிக்கை, 2021ஆம் ஆண்டில் 42 ஆக குறைந்துள்ளதையும் மத்திய உள்துறை அமைச்சர் பாராட்டினார்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காஷ்மீர் புகலிடமாகவும், நிதி உதவி பெறும் இடமாகவும் இருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார். பயங்கரவாதத் தேடுதல் நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், சிறையில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க, போதைப் பொருள் தடுப்புப் பிரிவை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும் உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார். எல்லையில் பயங்கரவாத ஊடுருவல் சம்பவம் நடைபெறாததை உறுதி செய்யுவும், பிரதமரின் தொலைநோக்கான அமைதியான மற்றும் செழிப்பான் ஜம்மு காஷ்மீரை அடையவும் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என அமித்ஷா கேட்டுக்கொண்டார்.