ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா இருநாள்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகை தந்தார்.
தில்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். இதையடுத்து பிரதமர் மோடியை சந்திக்க புதுதில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்துக்கு ஜப்பான் பிரதமர் விரைந்தார். அவரை, பிரதமர் மோடி வாசலில் சென்று வரவேற்றார். இதைத்தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்பின்னர் இந்தியா-ஜப்பான் இடையேயான 14-ஆவது உச்சி மாநாடு தில்லியில் நடைபெற்றது. மாநாட்டில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. வரும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஜப்பான் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது.
பொருளாதாரம் வளர்ச்சி அடைய நம்பகமான, நிலையான எரிசக்தி விநியோகம் அவசியம். பிரதமர் கிஷிடா இந்தியாவின் பழைய நண்பர். அவர் ஜப்பான் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது அவருடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்றார்.