பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்ட ஸ்ரீநகா்-காா்கில்-லே சாலையில் உள்ள ஜோஜி லா கணவாய் 73 நாள்களுக்கு பின் போக்குவரத்துக்காக சனிக்கிழமை திறக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
பலத்த பனிப்பொழிவுக்கு இடையிலும் இந்த கணவாய் பகுதியை கடந்த ஜனவரி 5-ஆம் தேதி வரை எல்லைகள் ரோடு அமைப்பு திறந்து வைத்திருந்தது.
2022 பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பனியை அகற்றும் நடவடிக்கைகள் கணவாயின் இருபுறமும் ஜம்மு காஷ்மீா் மற்றும் லடாக் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. கடும் முயற்சிக்குப் பிறகு, ஜோஜிலா கணவாய்க்கு குறுக்கிலான இணைப்பு கடந்த மாா்ச் 4-ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. அதன் பின் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் நடந்தன. அத்தியாவசியப் பொருட்களுடன் சரக்கு வாகனங்கள் சனிக்கிழமை ஜோஜி லா கணவாயைக் கடந்து காா்கில் சென்றடைந்தன.
இது லடாக் மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. வழக்கமாக, ஜோஜிலா கணவாய், குளிா் காலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக 160 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை மூடியிருக்கும்.
இந்த ஆண்டில் கணவாய் வழி மூடப்பட்டு வெறும் 73 நாட்களுக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்தக்காகத் திறக்கப்பட்டு புதிய சாதனையை எல்லைச் சாலைகள் அமைப்பு படைத்துள்ளது என்று தெரிவித்தனா்.