எதிர்க்கட்சிகள் அமளியை அடுத்து மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றக் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து காங்கிரஸ், திரிணமூல், சிவசேனை உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக கூட்டத்தொடர் தொடங்கிய உடனேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோன்று மக்களவையிலும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி ஆகியோருடன் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்தும் எதிர்க்கட்சிகளின் அமளி குறித்தும் இன்று காலை ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.