பனாஜி: கோவா முதல்வராக பதவியேற்க உள்ள பிரமோத் சாவந்த் பதவியேற்பு விழா மார்ச் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய சாவந்த், மார்ச் 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்றார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பாஜக ஆளும் 7 மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர் என்று சாவந்த் கூறினார்.
மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த பிரமோத் சாவந்த் கோவாவின் முதல்வராக இரண்டாவது முறையாக நீடிப்பார் என்று பாஜக நேற்று அறிவித்தது. அவர் ஒருமனதாக சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வடக்கு கோவாவில் உள்ள சங்கலிம் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பிரமோத் சாவந்த் (48). இவர் 2017-ல் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தபோது அவர் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாரிக்கரின் மரணத்திற்குப் பிறகு 2019 மார்ச் மாதம் முதல் முறையாக அவர் முதல்வராகப் பதவியேற்றார்.