ரஷியாவிடமிருந்து ஒரு சதவிகிதம் கச்சா எண்ணெய்கூட இந்தியா வாங்கவில்லை என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவையின் விலை உயர்வை கண்டித்து அமளியில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | விலை உயர்வு: மக்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
“பெட்ரோல் விலை உயர்வால் ஏழை மக்களிடமிருந்து ரூ. 10,000 கோடியை மோடியின் அரசு கொள்ளை அடிக்கின்றது. பலர், உக்ரைன் - ரஷியா இடையே நடைபெறும் போரால்தான் விலை உயர்கிறது என கருதுகின்றனர். ஆனால், ரஷியாவிடமிருந்து ஒரு சதவிகிதம்கூட கச்சா எண்ணெய் வாங்கவில்லை என பெட்ரோலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்” என்றார்.
தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி பேசியதாவது:
“சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு எரிபொருளின் விலை உயரும் என்று கூறினோம். அதேபோல் நடந்துள்ளது. ஏழைகளிடமிருந்து கொள்ளை அடிப்பதில் மோடி அரசு சிறிதும் தயங்குவதில்லை. மக்களவைக்கு வெளியேவும், உள்ளேயும் மக்களுக்காக விலை உயர்வை எதிர்ப்போம்” என்றார்.