நாட்டில் இளநிலை மருத்துவக் கல்வி இடங்கள் கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு 73 சதவீதமும், முதுநிலை மருத்துவ இடங்கள் 93 சதவீதமும் அதிகரித்து இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதில் விவரம்:
நாட்டில் கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பாக 51,348 மருத்துவ இடங்கள் இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 73 சதவீதம் அதிகரித்து, 89,875-ஆக உள்ளது. இதே காலகட்டத்தில் முதுநிலை மருத்துவ இடங்கள் 31,185-இலிருந்து 93 சதவீதம் அதிகரித்து 60,202-ஆக உள்ளது.
வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் பயின்றவா்கள் இந்தியாவில் மருத்துவா்களாகப் பணியாற்ற வேண்டுமெனில், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசின் திட்டத்தின்கீழ், 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 19 மருத்துவமனைகளில் இளநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்கிவிட்டன என்று அதில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.